கன்னியாகுமரி, பிப்.8 (டிஎன்எஸ்) கடலோர பகுதிகளில் மரைன் போலீசாரின் கண்காணிப்புப் பணிகளுக்காக 12 அதிநவீன ரோந்து படகுகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்ததை அடுத்து, கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக கடற்பகுதியில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, மரைன் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போலீசாருக்கு அதிநவீன படகுகள் மற்றும் கருவிகள் வழங்க தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி ரூ. 18 கோடியில் 12 அதிநவீன விசைப்படகுகள் வாங்கப்பட்டன. இவை 24 மணி நேரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து செல்லும். 32 அடி நீளமும், 11.5 அடி உயரமும் கொண்ட இப்படகுகள், குமரி மாவட்டம், சின்னமுட்டம் துறைமுகத்திற்கு நேற்று வந்திறங்கின.
சுமார் 20 கடல் மைல் வரை கண்காணிக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் பணியுடன் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் இவை பயன்படுத்தப்படும். குளச்சல், மண்டபம், மணல்மேல்குடி உள்ளிட்ட 12 மரைன் காவல் நிலையங்களுக்கும் இந்த விசைப்படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த படகில் அதிநவீன தொலை தெதடர்பு வசதிகள், விஎச்எப் உயிர் காக்கும் கருவிகள், முதலுதவி வசதிகள், நவீன ஆயுதங்கள் உள்ளன. (டிஎன்எஸ்)